பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், அந்நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியலில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
‘British Indians Voice’ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரிட்டனில் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2.9 சதவீதமாகும்.
இந்திய சமூகத்தினரின் வீட்டு உரிமை விகிதம் 74 சதவீதமாக உள்ளது. இது வெள்ளையின பிரிட்டிஷாரின் 68 சதவீதத்தை விட அதிகம். அதேபோல், இந்தியர்களின் வேலைவாய்ப்பு விகிதம் 76 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியிலும் இந்திய மாணவர்கள் சிறப்பான நிலையில் உள்ளனர். GCSE தேர்வுகளில் சீன மாணவர்களுக்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்கள் இரண்டாவது சிறந்த கல்வித் திறனை பெற்றுள்ளதாக அந்தப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
சுகாதாரத் துறையிலும் இந்தியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பிரிட்டன் அரசின் சுகாதாரத் துறையில் பணியாற்றும் 6 மருத்துவ நிபுணர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
பொருளாதார ரீதியாகவும் இந்திய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிட்டனில் இயங்கும் 1,912 இந்திய நிறுவனங்களின் மொத்த வர்த்தக மதிப்பு £105.77 பில்லியன் எனவும், இந்நிறுவனங்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் £47.4 பில்லியன் அளவில் இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
அரசியலிலும் இந்திய வம்சாவளியினர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். ஒரு பிரதமர், 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பிரிட்டன் அரசியலில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.
“இந்த சாதனைகள் எதுவும் தற்செயலாக நிகழவில்லை. தொடர்ந்து அமைதியாக உழைத்ததன் விளைவே இந்த முன்னேற்றம்” என ‘British Indians Voice’ வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
