டெல்லி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினர் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். டெல்லி போர்க்களமாக மாறியது. இந்நிலையில் தான் டெல்லியில் பிரச்சனை வெடிக்கலாம் என்று கடந்த 17ம் தேதியே டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வார்னிங் கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முன்கூட்டியே எப்படி அமெரிக்க தூதரகம் வார்னிங் கொடுத்தது, இதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர் அமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. கல் வீசப்பட்டது. சில போராட்டக்காரர்கள் போலீஸ்கார்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். மேலும் நேற்றைய தினம் டெல்லியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
அதுமட்டுமின்றி தற்போது வரை போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லியில் பிரச்சனை வருவதை முன்கூட்டியே அமெரிக்கா அறிந்து வைத்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகம் சார்பில் கடந்த 17 ம் தேதியே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் அமெரிக்கர்களுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ''ஜூலை 20ம் தேதி மத்திய டெல்லியில் குறிப்பாக ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெருந்திரளாக மக்கள் கூடவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளிலேயே நடைபெற உள்ளது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். போக்குவரத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
அதேபோல் ஜூலை 21ம் தேதி மத்திய டெல்லியில் உள்ள கிசான் காட்டில் ஒரு போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 250 தேசிய விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு, மோட்டார் சைக்கிள்களில் வந்து ஒன்றுகூட திட்டமிட்டுள்ளனர்.
இந்த இரண்டு போராட்டங்களும் பெரிய அளவில் நடைபெறவுள்ளதால் டெல்லி காவல்துறை மொத்த மத்திய டெல்லியையும் கட்டுப்பாட்டில் எடுக்கும். பாதுகாப்பு நடவடிக்கை, போக்கவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளும். இதனால் அமெரிக்க அரசு ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தவரை மத்திய டெல்லியில் குறிப்பாக ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் மற்றுமு் கிசான் காட் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை தவிர்க்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் கூட்டங்களில் கூடுவது, போராட்டங்களை தவிர்க்க வேண்டும். அமைதியான போராட்டமாக இருந்தாலும் கூட விலகியே இருக்க வேண்டும். உடனடியான தகவல்களை அறிய உள்ளூர் ஊடகங்களை பார்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். பயண ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை எப்போதும் கையுடன் வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பெற 'Smart Traveler Enrollment Program' (STEP)-இல் பதிவு செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் இந்த வார்னிங் மெசேஜ் தற்போது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் திட்டம் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை முன்கூட்டியே அறிந்து அமெரிக்கா இத்தகைய வார்னிங்கை கொடுத்ததாக பலரும் கூறி வரும் நிலையில் சில நெட்டிசன்கள் அதெப்படி பிரச்சனை வெடிக்கும் என்பது அமெரிக்க தூதரகத்துக்கு 4 நாட்களுக்கு முன்பே தெரியும்? இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.
