டெல்லி: மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியின் சார்பில் இன்று நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அமைதியாக நாடாளுமன்றம் நோக்கி சென்றனர். ஆனால், காவல் துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் இவர்களை கலைக்க முயன்றது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது எல்லாம் என்ன மாதிரியான அணுகுமுறை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பல்வேறு அரசியல் தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவில்லை எனில், ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று 20 நாட்களுக்கு முன்னதாகவே கரப்பான் பூச்சி கட்சி அமைப்பினர் தெரிவித்துவிட்டனர். எனவே இன்று திட்டமிட்டபடி மாணவர்களும் இளைஞர்களும் டெல்லி நாடாளுமன்றம் நோக்கி வந்தனர். ஏராளமான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டபோதும், இன்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டிருந்தும் கூட.. ஆயிரக்கணக்கில் இளைங்கள் ஒன்று சேர்ந்திருந்தனர்.
கண்ணீர் புகை குண்டு
காவல்துறையின் அமைத்திருந்த ஒவ்வொரு தடுப்புகளையும் மீறிய போராட்டக்காரர்கள், நாடாளுமன்றம் நோக்கி தொடர்ந்து முன்னேறி வந்தனர். குறிப்பாக சாஸ்திரி பவன், ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டியபோது.. அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. மேலும் கையில் சிக்கிய இளைஞர்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் லத்தியால் அடி வெளுத்து வருகின்றனர். காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
அமைதி போராட்டத்தில் போலீஸ் நடத்திய வன்முறை
காங்கிரஸ் மூத்த எம்பி சசிதரூர் இது குறித்து கூறுகையில், "அகிம்சை வழியில் போராட்டம் நடக்கும் போது அங்கு தடியடி நடத்த வேண்டிய தேவை என்ன வந்தது? போலீசார் நடந்துக்கொண்ட விதம் வன்முறை செயலாகும். இதில் என்ன நியாயம் இருக்கிறது என எனக்கு புரியவில்லை.
நாடாளுமன்றம் என்பது வெறும் மசோதாக்களை மட்டும் நிறைவேற்றி, அதை அறிவிக்கும் நோட்டீஸ் போர்டு கிடையாது. அது மக்களின் குரலையும், கவலைகளையும் எதிரொலிக்கும் இடம்" என்று கூறியுள்ளார்..
நாளை நாடாளுமன்றத்தை நிச்சயம் முற்றுகையிடுவோம்.. சோனம் வாங்சுக் மனைவி உறுதி!
பேச்சுவார்த்தைக்கு வந்த மத்திய அரசு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இப்போதுதான் தொடங்கியிருக்கும் நிலையில், மாணவர்களின் இந்த போராட்டம் மத்திய அரசுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விஷயம் ஏற்கெனவே கையை மீறி போய் இருப்பதால்.. உடனடியாக தீர்வு காண கரப்பான் பூச்சி கட்சி அமைப்பை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம் நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகள், மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து, இரு அவைகளையும் முடங்கியிருக்கின்றன.
