பழனி: பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி கோயில் நிலத்தை அபகரிக்க முயன்ற நபர்கள் யார் என்ற கேள்வி மக்கள் பலர் மத்தியில் எழுந்துள்ளது.

சார்பதிவாளர் சஸ்பெண்ட், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம், உயர் நீதிமன்றம் பத்திரப்பதிவை ரத்து செய்தது எனப் பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடித் திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த விவகாரம் பூதாகரமானதில் இருந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்த ஆகப் பெரிய குமுறல் இதுதான்.. எல்லாவற்றையும் சொல்கிறார்களே... கடைசி வரை அந்த ரூ.100 கோடி கோயில் நிலத்தை ஆக்கிரமித்து, திருடி, தன் பேருக்குப் பத்திரப்பதிவு செஞ்ச அந்தத் தனிநபர்கள் யார்னு ஏன் வெளிய சொல்லாம மூடி மறைக்கிறாங்க? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசியல் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் அந்த பவர் செண்டர் யார்? என்ற விவாதங்கள் தீப்பற்றி எரியும் நேரத்தில் , பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கையின் மூலமாக அந்த மர்ம நபர்களின் முகமூடி தற்போது கிழிந்திருக்கிறது.

FIR காட்டும் உண்மை
கோவில் நிர்வாகத்தின் நிலப் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள அந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இந்த மெகா மோசடியின் பின்னணியில் உள்ள பெயர்கள்..

விற்பனையாளராக நாடகமாடியவர்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர் 'திருப்புகழ் சாமிகள், முருகதாஸ் சாமிகள் மற்றும் தண்டபாணி சாமிகள் டிரஸ்ட்' என்ற போலியான ஒரு தனியார் அறக்கட்டளையின் நிர்வாகி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு, இந்த 1.40 ஏக்கர் அரசு நிலத்திற்குத் தான் தான் ஓனர் என்பது போல ஆவணங்களைத் தயாரித்துள்ளார். 

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி. ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குக் கைமாற்றி, தங்களுக்குள் கிரயப் பத்திரம் தயாரித்துக் கொண்டது இவர்கள்தான். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுடன் சேர்ந்து, இந்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய மூவர் மீதும் தான் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், கிரிமினல் சதி உள்ளிட்ட 5 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.

ஏன் இத்தனை நாட்கள் பெயர்கள் மறைக்கப்பட்டன?
வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் இந்த நபர்களின் பின்னணியை அதிகாரிகள் மற்றும் சில ஊடகங்கள் வெளிப்படையாகப் பேசத் தயங்கியதற்குப் பின்னால் மிகப் பெரிய நெருக்கடி இருப்பதாகக் கூறப்படுகிறது:

உடுமலைப்பேட்டை வெள்ளத்துரையும், பழனி சேதுபதியும் வெறும் முகமூடிகள் மட்டுமே. இவர்களது பின்னணியைத் தோண்டினால், மண்டல அளவிலும் மாநில அளவிலும் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் சில தலைகளின் தொடர்புகள் வெளியாகும் என்பதால் தான் லோக்கல் போலீசார் ஆரம்பத்தில் மெத்தனம் காட்டினர் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

பழனி கோவில் நிலம்.. கேஸ் சிபிசிஐடி கைக்கு போயிருச்சு! களமிறங்கிய ஆபீசர்ஸ்.. உருளப் போகும் தலைகள்!
பழனி கோவில் நிலம்.. கேஸ் சிபிசிஐடி கைக்கு போயிருச்சு! களமிறங்கிய ஆபீசர்ஸ்.. உருளப் போகும் தலைகள்!
1888-ஆம் ஆண்டின் மடத்து ஆவணங்கள், தாலுகா அலுவலகத்தின் வருவாய்த் துறை ஆவணங்கள்என அனைத்தையும் மிகத் துல்லியமாகப் போலியாகத் தயாரிப்பதற்கு, அரசுத் துறையின் உயர் அதிகாரிகள் பலரின் ஆசி இல்லாமல் நடந்திருக்காது என்கிறார்கள்.

அந்தப் புள்ளிகளைக் காப்பாற்றவே இந்தத் தனிநபர்களின் விபரங்கள் பொதுவெளியில் பெரிதாக விவாதிக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சிகள் புகார்கள் வைக்கின்றன.
0
0
0
0
0
0