அதிமுக மகளிரணி கூட்டத்தில் மகளிரணி இணை செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் பேச்சால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. லீமா ரோஸ் பேச்சுக்கு மகளிரணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தலையிட்டு சமாதானம் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிமுகவே தேங்காய் போல சிதறி வருகிறது. இதுவரை அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். 47 தொகுதிகளில் அதிமுக ஜெயித்த நிலையில் தற்போது அக்கட்சிக்கு 41 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், தோல்வி குறித்து ஆராய மாவட்டவாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதன் ஒரு பகுதியாக, மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் கடந்த புதன்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் குறித்தும், அடுத்தட்டமாக அ.தி.மு.க-வை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வது குறித்தும் மகளிரணி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் உள்ளிட்ட பல மகளிரணி நிர்வாகிகள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் பேசும்போது, சலசலப்பு ஏற்பட்டது. லீமா ரோஸ் பேசும்போது, 'ஜெயலலிதா அம்மையார்' எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் 'அம்மா' என்று அழைப்பது வழக்கமாக உள்ள நிலையில், ஜெயலலிதா என லீமா ரோஸ் குறிப்பிட்டதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எழுந்து மகளிரணியினரை சமாதானம் செய்துள்ளார். "ரத்தத்தில் ஊறியவர்களுக்கு தான் புரட்சித்தலைவி அம்மாவை அம்மா என்று அழைக்கத்தோன்றும். புதிதாக வந்தவர் வாய்தவறி சொல்லிவிட்டார்" என கே.பி. முனுசாமி கூறி மகளிரணியை அமைதிப் படுத்தியுள்ளார்.

லீமா ரோஸ் மார்ட்டின், தவெக அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்தது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியாக உள்ளது. தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அனைவரின் கட்சி பதவியையும் பறித்திருந்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இதனால் சக நிர்வாகிகளே கடுப்பில் இருந்து வருகின்றனர்.

லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக மகளிரணி துணைத்தலைவராக தொடர்வதை விரும்பாமல் அதிமுக மகளிர் அணியினர் குமுறி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் லீமா ரோஸ் பேச்சுக்கு கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

0
0
0
0
0
0