மேட்டூர் அணையில் இருந்து குறுவைக்காக ஜூன் 12 திறக்கபட்ட தண்ணீரை நம்பி 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதில் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 40,000 மேற்பட்ட நெற்பயிர்கள் கருகி நாசமானது இந்த நிலையில் தற்பொழுது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தலைஞாயிறு, கள்ளிமேடு, தாமரைப் புலம், வேதாரண்யம், கத்தரிப்புலம், தென்னம்புலம், அவரிக்காடு, செட்டிபுலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கரில் உழவு பணிகள் மேற்கொண்டு சன்னரகம் மற்றும் மத்திய ரகம் சம்பா நெல் தெளித்து 1 மாதம் ஆகியும் தண்ணீர் இல்லாமல், மழையும் இல்லாமல், நெல்மணிகள் முளைக்காமல் வயல்கள் வறண்டு காணப்படுவதால் மயில் புறா உள்ளிட்ட பறவைகள் சாப்பிடுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் கடன் வாங்கி குறுவை, சம்பா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் எவ்வாறு கடனை அடைப்பது என கவலையில் உள்ளனர். மேலும் இதுவரை குறுவைக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை எனவும் சம்பா சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளலாமா என வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும் எனவும், இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், குறுவைக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கி தற்போது சம்பா பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அறுகே தாமிரபுலத்தில் ஒரு விவசாயி இப்படியே விட்டால் விவசாயம் அழிந்துவிடும் பணம் முக்கியம் இல்லை விவசாயம்தான் முக்கியம் பணம் இல்லாமல் இருந்துவிடலாம் உணவு இல்லாமல் இருக்க முடியாது என்று 15 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ரூபாய் 2500 பணம் செலவு செய்து டேங்கர் மூலம் தண்ணீரை எடுத்து வந்து நாற்றுப்பயிர்களுக்கு இறைத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது 

குறிப்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மழையும் இல்லாமலும், ஆறுகளில் தண்ணீர் வராமலும் பாலைவனம் போல் காட்சியளிக்க துவங்கி உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் மழை இல்லாமல் போனால் குடிநீர் பற்றாக்குறை கூட ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐப்பசி மாதம் தொடங்கியும் ஒரு சொட்டு மழை கூட பெய்யாமல் வேதாரண்யம் பகுதியில் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
0
0
0
0