மயிலாடுதுறை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஜலில், வெளிநாட்டில் உள்ள இவருக்கு சைதா பானு என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.
விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சைதா பானு நேற்று அதிகாலை 3 மணிக்கு ரயிலில் அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டை திறந்து பார்த்தபோது பின் பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் அவர் ரூமிற்குள் சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதிலிருந்து 52 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சைதா பானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. மீனா, டிஎஸ்பி. சஞ்சீவ் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.