நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான், பாஸித், நூஃபுல் 17 வயதாகிய மூவரும் பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள். மூவரில் ரிஸ்வான் கீழ்வேளூர் தனியார் ஐடிஐ யிலும் பாஸித் திருவாரூர் வேலுடையார் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நூஃபுல் திரு வி.க அரசு கலைக் கல்லூரியிலும் தற்பொழுது படித்து வருகின்றனர்.
நேற்றிரவு இவர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் கீழ்வேளூரில் இருந்து திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர். கூத்தூர் பெட்ரோல் பங்க் அருகே திருவாரூரிலிருந்து நாகை நோக்கி வந்த சரக்கு வாகனத்தின் (டாட்டா ஏஸ்) மீது மூன்று பேரும் பயணித்த இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டது. இதனால் மூவருக்கும் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரிஸ்வான் மற்றும் பாசித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த நூஃபுல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த டாட்டா ஏஸ் ஓட்டுநர் சக்திவேல் தலைமறைவாகி உள்ள நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.