கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக முறைகேடு செய்து ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் தான் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வாக்குகள் பதிவாகி இருந்த 4 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து கருகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் 2026 மே 4ம் தேதி வரை 3 முறை முதல்வராக இருந்தவர் மம்தா பானர்ஜி. இந்நிலையில் தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ல் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளில் பாஜக 207 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
மம்தா பானர்ஜியும் தோற்கடிக்கப்பட்டார். பாபனிபூர் சட்டசபை தொகுதியில் மம்தா பானர்ஜியை பாஜகவின் சுவேந்து அதிகாரி வீழ்த்தினார். இதையடுத்து மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலில் பாஜக முறைகேடு செய்து வென்றதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
இதற்கிடையே தான் மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்குகள் பதிவாகி இருந்த 4 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மொத்தம் 10 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு கொல்கத்தாவில் உள்ள 10 மாடிகள் கொண்ட அரசு கட்டத்தின் 10வது மாடியில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பிற கட்டங்களில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 10ம் தேதி காலை இந்த கட்டத்தின் 3வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரரகள் வந்து அணைத்தனர். அதன்பிறகு அடுத்த 2 மணிநேரத்தில் 7 வது மாடியில் பிடித்த தீ மேல்மாடிகளுக்கும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 7, 8 வது மாடியில் பிடித்த தீ பெரும் போராட்டத்துக்கு பிறகு அணைக்கப்பட்டது. இருப்பினும் 9, 10வது மாடி முழுவதுமாக எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2026 மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக பயன்படுத்த்தப்பட்ட 10 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் கருகியது.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தனி தனி அணியாக பிரிந்தது, பாஜக மீதான மம்தா பானர்ஜியின் தேர்தல் முறைகேடு புகாருக்கு நடுே இந்த சம்பவம் நடந்து இருப்பது மேற்கு வங்க அரசியலின் பரபரப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
