ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்.
தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் 371 கோடி ரூபாய் கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடுவை கைது செய்த சிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். கைது நடவடிக்கையால் ஆந்திராவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன். சாலைகளில் டயர்களை கொளுத்தி கைதும் செய்யப்பட்டனர்.
நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகையும் அமைச்சருமான ரோஜா இந்த கைது நடவடிக்கையால் உற்சாகமடைந்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக நகரியில் அமைச்சர் ரோஜா, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்ததுடன் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்.