சென்னை: ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும் என்பது இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் நீண்ட கால கோரிக்கை. கடந்த திமுக ஆட்சியில் இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் தற்போது தவெக ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வரப்படுமா? என்பது குறித்து விசிக அமைச்சர் வன்னி அரசு விளக்கமளித்துள்ளார்.
சாதி, மதம் மாறி திருமணம் செய்துக்கொண்டாலோ.. அல்லது பொருளாதாரத்தில் சமமாக இல்லாதவர்கள் திருமணம் செய்துக்கொண்டாலோ அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இப்படியான ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தனிச்சட்டம் வேண்டும்?
கடந்த திமுக ஆட்சியில் இந்த கோரிக்கைகள் எழுந்தபோது, தனி சட்டம் இயற்றப்படவில்லை. இப்போது ஆட்சி மாறியிருக்கிறது. தவெக ஆட்சியில் விசக இடம் பெற்றிருக்கிறது. இனியாவது தனி சட்டம் கொண்டு வரப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு அமைச்சர் வன்னி அரசு அளித்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது.
கள ஆய்வு அவர் கூறியதாவது, "தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு புகார்கள் எழுந்திருக்கின்றன. இதனையடுத்து நாங்கள் கள ஆய்வை மேற்கொண்டோம். அதில், தலித்துகளுக்கு என ஒதுக்கப்பட்ட சுடுகாட்டுக்கு 43 சென்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் ஒரு பகுதியை தனியார் ஆக்கிரமிப்பு செய்து ரிசார்ட் கட்டியிருக்கிறார். இது கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
நில ஆக்கிரமிப்பு
எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்திலிருந்து ரிசார்ட்டை அகற்ற வேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். இந்த 43 சென்ட் நிலம் எது என்பதை அளந்து வேலியிட வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தது. ஆகவே முறைப்படி தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்டு நிலம் அளக்கப்பட்டிருக்கிறது. இது நீண்ட கால பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய இடத்திற்கு நாங்கள் வந்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
தனிச்சட்டம் எப்போது?
இதனையடுத்து ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அவர், "தனிச்சட்டத்தை இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால்தான் ஓய்வு பெற்ற நீதிபதி பாட்சா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உடனடியாக தனிச்சட்டம் வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் பேசியிருந்தேன்.
இதை கேட்ட முதலமைச்சர் கோரிக்கை ஏற்கப்படுவதாக கூறியிருக்கிறார். மீண்டும் வரும் 18ம் தேதி நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதை நான் வலியுறுத்துவேன். முதல்வரை தனியே சந்தித்து இது குறித்து நாங்கள் வலியுறுத்த இருக்கிறோம். இந்த கூட்டணி ஆட்சியில் நிச்சயம் தனிச்சட்டம் இயற்றப்படும்" என்று கூறியிருக்கிறார்.
