சென்னை: திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். முதல்வர் பதவியில் இருக்கும் விஜய், அந்தப் பொறுப்பை உணர்ந்து பேசவில்லை என்றும் சாடினார். அப்போது கொளத்தூர் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசும் போது கதறி அழுதார்.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தோல்வி அடைந்திருந்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் சுமார் சுமார் 8700 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் பாபுவிடம் தோல்வி அடைந்தார். இதற்கிடையே திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜ், கொளத்தூர் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசும்போது கதறி அழுதார்.

சத்யராஜ் மேலும் பேசுகையில், "சட்டசபையில் எதிர்க்கட்சியில் நம்ம தம்பி உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். நோண்டி நொங்கு எடுப்பாருனு சொல்லுவாங்களே அது இதுதான். கிழி கிழினு கிழிச்சுட்டாரு.. ஏங்க நீங்க முதல் நாள் நைட்டே போன் பண்ணி சொல்லக் கூடாதா.. "நாளைக்கு நான் இந்தக் கேள்வி எல்லாம் கேட்கப் போறேன்னு சொல்லக் கூடாதா.. அவர் ஏதாச்சும் பதில் ரெடி பண்ணிட்டு வந்து இருப்பார். திடீர்னு சட்டசபையில் எழுந்து இவ்வளவு கேள்விகள் கேட்டால் அவர் எப்படிப் பதில் சொல்லுவார்? போய் ட்விட்டர்ல்தான் பதில் சொல்லி ஆகணும், வேற வழி இல்லை.

எல்லாரும் சில இடத்தில் சைலன்ட்டாகவும்.. சில இடத்தில் ஆக்ரோஷமாகவும் இருப்பார்கள்.. அவர் சைலன்ட்டா இருக்கிற இடம் சட்டசபை. ஆக்ரோஷமாக பேசுகிற இடம், நன்றி தெரிவிக்கப் போற இடம் அது தான் அவரது லாஜிக்..

கொளத்தூரில் ஸ்டாலின் தோத்துட்டாரு. நான் அடுத்த நாள் தலைவருக்கு போன் பண்றேன். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. என்னங்க இப்படினு ஆரம்பித்தேன் உடனே, அதை விடுங்க.. இப்ப நன்றி சொல்றதுக்காகப் போயிட்டு இருக்கேங்கன்றாரு. அடுத்த நாள் நன்றி தெரிவிக்கிற கூட்டத்திற்கு போறாரு.. மக்கள் அத்தனை பேரும் அழறாங்க. அவர் மட்டுமில்லை, அன்பில் மகேஷ் போற இடத்தில், தம்பி தமிழர் பிரசன்னா போற இடத்தில் எல்லா இடத்திலும் இதை நிலை தான். எங்க எப்படி, என்ன எங்க எப்படி ஸ்லிப் ஆச்சுன்னு தெரியல.. ஆயிருச்சு" என்றார்.

கடும் தாக்கு தொடர்ந்து முதல்வர் விஜய்யை விமர்சித்துப் பேசிய அவர், "என்னங்க ஒரு முதல்வர் பேசுற பேச்சா இது? வாயில் நல்லா வருது, எனக்குக் கூட தான் நல்லா நல்லா வரும்.. நல்லா நல்லா வரும்! எவ்வளவு வேணாலும் நல்லா வரும். என்னைக் கூட இன்ஸ்டாகிராமில் பலர் திட்டுவாங்க. கவலையே படமாட்டேன்! தேவைனா சொல்லுங்க, நிறைய எனக்கு நிறைய கெட்ட வார்த்தை தெரியும். என்னைத் திட்ட எதாவது வார்த்தை வேண்டும் என்றால் சொல்லுங்கள்.. நானே எடுத்துத் தருகிறேன்" என்றார்.

கண்ணீர் விட்ட சத்யராஜ்
அப்போது தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைந்தது தொடர்பாகவும் பேசும் போது சத்யராஜ் கண்ணீர்விட்டு அழுதார். "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயித்திருக்க வேண்டும்" எனச் சொன்ன அவர் கதறி அழுதார்.

பிறகு கண்ணீரை கட்டுப்படுத்தியவாறு தொடர்ந்து பேசிய அவர், "நான் ரொம்பவும் நக்கலான ஆளு.. கிண்டலான ஆளு.. எனது சினிமாவிலேயே பார்த்திருப்பீர்கள்.. எல்லாவற்றையும் ஜாலியாக தான் எடுத்து கொள்வேன். ஆனால், இதை அப்படி எடுத்து கொள்ள முடியவில்லை.

உங்களுக்கு எல்லாம் பட்டால் தான் புத்தி வரும். பட்டு திருந்துவீர்கள்.. இப்பேர்ப்பட்ட தலைவரை தோற்கடித்துவிட்டீர்கள். அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வருக்கே உதாரணமாக இருந்தவர் ஸ்டாலின்.

இந்தத் தமிழ்நாட்டைப் பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சிதான். தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கைகளில் ஏந்தி நடந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை கொண்டு வந்தது எல்லாம் சாதாரணமா? அந்த வழியில் ஆட்சி செய்தவர் ஸ்டாலின்" என்றார்.
0
0
0
0
0
0