மயிலாடுதுறை அரசு உதவி பெறும் ஏவிசி (தன்னாட்சி) கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கடற்கரை கிராமத்தில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம், தமிழ்நாடு பனை நல வாரியம் மற்றும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் இணைந்து தமிழக கடலோரப் பகுதிகளில் மண்ணரிப்பு தடுப்பு, கடல் நீர் ஊருக்குள் போவதை தடுப்பது, நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 14 கடற்கரை ஓர பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை நடும் பணி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சின்னங்குடி கடற்கரைகளில் சுமார் 300 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளை கொண்டு 11,500 பனை விதைகள் விதைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் புல முதன்மையர் (டீன்) முனைவர் எஸ்.மயில்வாகனன் மற்றும் துணை தேர்வு நெறியாளர் டி.எம்.சதீஷ்கண்ணன், சின்னகுடி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.சௌந்தரநாயகி.முனைவர் எம்.விஜயலெட்சுமி, முனைவர் எம்.சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.