சென்னை: திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு என்று சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு புகார்களை அளித்திருந்தந்தார், இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த புகார்களை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார்.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சில பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், தன்னை காதலித்தாகவும், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தாகவும், ஆனால் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் திருமணம் செய்வதாகக் கூறிவிட்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது மட்டுமின்றி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே தானும் சீமானும் மாலையை மாற்றிக்கொண்டோம், அரசியலில் ஒரு நிலை வரும் வரை குழந்தை வேண்டாம் என்று கூறி சீமான், தனது கருவையும் கலைத்ததாகவும் தெரிவித்தார். "நான் ஏழு முறை கருவுற்றேன், இருந்தும், எனது அனுமதி இல்லாமல் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதனால் எனது உடலும் உள்ளமும் பலவீனம் ஆனது" சினிமாவில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த 60,00,000/- லட்சம் பணத்தையும் 35,00,000/- மதிப்பிலான நகைகளையும் சீமான் பெற்றுக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்து அவர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார்.

இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீமான் மீதான புகார்களை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளார். இதற்காக வெள்ளிக்கிழமை இரவு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர், சீமான் மீதான அனைத்து புகார்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "போலீஸில் புகார் அளித்த பிறகு போலீசாரின் உரியப் பாதுகாப்புடன் தான் நான் தங்கி இருந்தேன். வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தான் தங்கி இருந்தேன். அனைத்தும் நன்றாகச் சென்று கொண்டு இருந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக அவர்கள் ஒரு ரூட்டில் செல்கிறார். என்னையும் வேறு ஒரு ரூட்டில் தள்ளப் பார்க்கிறார். இதன் காரணமாகவே எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்டுவிட்டுப் பேசும்படி கூறியிருந்தேன். வீரலட்சுமிக்கு தெரிந்த இடத்தில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவே என்னை அங்கிருந்து வெளியே செல்லும்படி சொன்னார்கள். அப்போது இரவு நேரம் என்பதால் அங்கே இருக்க போலீஸ் தான் பேசினார்கள். நகரில் இருந்து வெளியே தங்கியிருந்தேன். காலையில் உணவு கூட கிடைக்கவில்லை. போலீஸ் தான் வாங்கிக் கொடுத்தார்கள்.

இப்படி வெளியே சொல்ல முடியாத துன்புறுத்தல்களை நான் எதிர்கொண்டேன். இதன் காரணமாகவே நான் புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்தேன். நான் இப்போது பெங்களூர் கிளம்புகிறேன். யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. சீமானிடமும் கூட இது குறித்துப் பேசினேன். இதனால் புகாரை நான் வாபஸ் பெற்றுள்ளேன். மீண்டும் இந்த புகாரை முன்னெடுக்க விரும்பவில்லை" என்று அவர் தெரிவித்தார்.