விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் நேற்று நிகழ்ந்த ஒரு பயங்கர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உருகிய இரும்பை ஏற்றிச் சென்ற கொள்கலன் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.
விசாகப்பட்டினம் உருக்கு ஆலையில் உள்ள SMS-2 மற்றும் STC-3 ஆகிய பிரிவுகளில் நேற்று திங்கள்கிழமை பணிகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது மிக அதிக வெப்பநிலையில் உருகிய நிலையில் இருந்த இரும்பை ஏற்றிச் சென்ற ஒரு பெரிய கொள்கலன் எதிர்பாராத விதமாக வெடித்தது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து, அந்தப் பெரிய கொள்கலனில் இருந்த உருகிய இரும்பு குழம்பு ஆலைக்குள் பெருமளவில் கசிந்தது.
மிக அதிக வெப்பத்தில் இருந்த இரும்பு குழம்பு தொழிலாளர்கள் மீது பட்டதால், அங்குப் பெரும் பதற்றம் உருவானது. தொழிலாளர்கள் தங்களைக் காத்துக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும், அதையும் தாண்டி அந்த இரும்பு குழம்பில் சிக்கி சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் ஆலையின் நிரந்தர ஊழியர்கள், 3 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர்.
உயிரிழந்த நிரந்தர ஊழியர்கள் தொழில்நுட்ப வல்லுநர் கோந்தினா பானு குமார், மேலாளர்கள் கே. பிரபாகர், கோல்ட் குமார் மற்றும் ஜி.வி. அப்பாராவ், எம். கிருஷ்ணா நாகு என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல இந்த விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ரமணா, திரினாத், என். அப்பல ராஜு ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த உடனேயே ஆலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இரங்கல்
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், "விசாகப்பட்டினம் உருக்கு ஆலை விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.
விபத்து நடந்த இடத்திற்கு ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் வங்களபுடி அனிதா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஸ்ரீபரத் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். தற்போது விபத்து நடந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான நிவாரண மற்றும் உதவி நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
