உக்ரைன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜப்பான், கனடா உள்ளிட்ட 16 நாடுகளை தனத நட்புப் பட்டியலில் இருந்து ரஷ்யா திடீரென நீக்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிராக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
 
ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் மற்ற சில நாடுகளும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அண்மையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்கும் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதனிடையே, தங்களுக்கு எதிராக பேசி வரும் நாடுகள் மீது ரஷ்யாவும் கடந்த வாரம் பொருளாதாரத் தடையை விதித்தது. இந்த சூழலில், 16 நாடுகளை திடீரென தனது நடப்புப் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில், "அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து, ஜப்பான், மொனாக்கோ, மான்டெனெக்ரோ, நியூசிலாந்து, நார்வே, தைவான், சான் மரினோ, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்விட்சர்லாந்து, உக்ரைன் ஆகிய 16 நாடுகள் ரஷ்யாவின் நட்பு நாடுகள் என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தையும் தனது நட்புப் பட்டியலில் இருந்து நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
2
0
0
0
0
0