கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலை திறக்க வழியுறித்தி பட்டீஸ்வரம் பகுதி வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோவில் முன் சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோவிலை திறக்க அனுமதி அளித்த பின்னரும் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராமன் கோவிலை திறக்க அனுமதி மறுப்பதாக சொல்லப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் அரசு ஊரடங்கு அமல்படுத்திய நாட்களில் இருந்து அனைத்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவில் முன் அர்ச்சனை, பூ, மாலை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பியே தங்களின் வருமானம் கிடைத்து வந்ததாகவும், கோவில் மூடப்பட்டதால் தங்களின் அன்றாட வருவாய் கூட கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் கோவிலை திறக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தர தொடங்கினர். ஆனால் கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் இணைந்து கோவில் நிர்வாக அதிகாரியை நேரில் சந்தித்து விவரம் கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு அவர் சரியான விளக்கம் தெரிவிக்க மறுத்து விட்டதாகவும், அங்கு வந்தவர்களில் ஒருவரின் செல்போனை நிர்வாக அதிகாரி பறித்துக்கொண்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் அனைவரும் ஒன்றினைந்து கோவிலை திறக்க வழியுறுத்தியும், நிர்வாக அதிகாரியை கண்டித்தும், வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைமையில் துர்க்கையம்மன் கோவில் முன் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கோவில் நிர்வாக அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததால் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.