கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி இயந்திரவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பாலாஜி குமரேசன் முகமது அனாஸ் முகமது ஜாவித் ஆகியோர் இணைந்து பேராசிரியர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் படி பேரிடர் காலத்திலும் மழை மற்றும் கிராம பகுதிகளிலும் உள்ள மக்களுக்காக, பயன்பாடின்றி செல்லும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் அடுப்பினை வடிவமைத்துள்ளனர்.

பேரிடர் காலத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்க இயலாதது, மேலும் தற்போதைய சிலிண்டரின் விலை உயர்வினால் கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர், இதனை கருத்தில் கொண்டு பயன்பாடின்றி செல்லும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் அடுப்பினை உருவாக்கியுள்ளனர். இந்த அடுப்பில் பொருத்தப்பட்ட கருவியானது எந்தவிதமான பயன்பாடற்ற வெப்பத்தினையும் மின்சாரமாக மாற்றும் சக்தி உடையது. எனவே இந்த அடுப்பினை பயன்படுத்தும்போது உருவாகும் வெப்பமானது மின்சாரமாக மாற்றப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

இந்த மின்சாரத்தை வைத்து கைபேசியை சார்ஜ் செய்ய முடியும். இதில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி மின்விளக்கு 4 மணிநேரம் பிரகாசமாக எரியும் தன்மை உள்ளது. இந்த நவீன அடுப்பு பேரிடர் காலத்திலும் மின்வெட்டு காலத்திலும் ஒரு மாற்று சக்தியாக இருப்பது நிச்சயம். இந்த அடுப்பினை நமது ராணுவ வீரர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த அடுப்பினை பயன்படுத்தி ராணுவ வீரர்கள் எந்த இடத்திலிருந்தும் மின்சாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த நவீன அடுப்பின் செயல்பாட்டை 8வது தமிழ்நாடு பெட்டாலியன் லெப்டினன்ட் கர்னல் சாங்கர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு மாணவர்களையும், வழிகாட்டிய பேராசிரியரையும் வாழ்த்தினார்.

மேலும் கல்லூரி நிறுவன தலைவர் திரு.திருநாவுக்கரசு, கல்லூரியின் ஆலோசகர் திரு.கோதண்டபாணி, கல்லூரியின் முதல்வர் முனைவர்.பாலமுருகன், துணை முதல்வர் முனைவர் கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர் ருக்மாங்கதன், இயந்திரவியல் துறை தலைவர் சுந்தர செல்வன், திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண், ரிசர்ச் கமிட்டி மெம்பர் சதீஷ்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களை வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
2
1
0
0
0
0