லண்டன்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டனில் இந்தியர்கள் , அங்குள்ள வங்கதேச தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேசத்தில் சமீப நாட்களாக ஹிந்துக்கள் , கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை மத நிந்தனை செய்ததாக அங்குள்ள கும்பல் மரத்தில் தலைக்கீழாக தொங்கவிட்டு உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்பவரும் அடித்துக்கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தில் நடந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்து மக்களுக்கு ஆதரவாக டெல்லியில் வங்கதேச தூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினமான ஹிந்துக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பிரிட்டனின் லண்டனில் உள்ள வங்கதேச தூதரக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய வம்சாவளி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வங்கதேசத்தின் தேசிய கீதமான’ அமர் ஷோனர் பங்களா’வை இசைத்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நிறுத்தக் கோரி கோஷங்களை எழுப்பினர்
முன்னதாக ஹிந்துக்களுக்கு ஆதரவாக நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
